தேங்காய் எண்ணெய் விஷமாம்.. ஹார்வர்ட் பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை: வைரலான வீடியோ
ஹார்வர்ட் பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் தேங்காய் எண்ணெய் பியூர் விஷம் என்று பேசிய சர்ச்சை வீடியோ வைரல் ஆகியுள்ளது.
சென்னை: ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் என்பவர் ஜெர்மனியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், தேங்காய் எண்ணெய் மிக மோசமான உணவு என்றும் அது விஷம் என்றும் பேசினார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹார்வர்ட் பேராசிரியரின் கருத்துக்கு தேங்காய் எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தும் கேரள மக்கள், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிஎச் சான் பொது சுகாதார பள்ளியின் தொற்றுநோயியல் துறையின் இணை பேராசிரியர் கரின் மிஷெல்ஸ். இவர் அண்மையில் ஜெர்மனியில் ஃப்ரைபர்க் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் 'தேங்காய் எண்ணெய்யும் இதர ஊட்டச்சத்து பிரச்சினைகளும் பிரச்சனைகளும்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் "தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமானது இல்லை என்று கூறினார்.
மேலும், "தேங்காய் எண்ணெய் பற்றி நான் உடனடியாக உங்களை எச்சரிக்க மட்டும்தான் முடியும். இதை நீங்கள் சாப்பிடுவீர்களானால், இது மிக மோசமான உணவுகளில் ஒன்றாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Everything you know about coconut oil might be a lie pic.twitter.com/4a7MklWrF8
— NowThis (@nowthisnews) August 21, 2018
அதோடு, தேங்காய் எண்ணெய் அதிக கொழுப்புச் சத்து நிறைந்தது. அது கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதனால், இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். மாட்டுக்கறியில் இருக்கும் 60 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால், அதைவிட அதிகமாக தேங்காய் எண்ணெயில் 80 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தேங்காய் எண்ணெய் பற்றிய கரின் மிஷெல்ஸ் பேச்சு வீடியோவாக கடந்த ஜூலை மாதம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஹார்வர்ட் பேராசிரியர் மூன்று இடங்களில் தேங்காய் எண்ணெய்யை விஷம் என்று குறிப்பிடுகிறார். இதனால், தேங்காய் எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தும் மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஹார்வர்ட் பேராசிரியரின் இந்த பேச்சால் தேங்காய் எண்ணெயின் விற்பனை சரிந்துள்ளதாக சிலர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
மூன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், ஹார்வர்ட் பேராசிரியர் தேங்காய் எண்ணெய்யை பியூர் பாய்சன் என்று ஆராய்ச்சி செய்திருப்பது ஒரு பழைய ஜோக் என்று கிண்டல் செய்துள்ளார்.
அதேபோல, மற்றொரு ஸ்மிதா பருவா என்பவர் குறிப்பிடுகையில், இவர்களில் தேங்காய் எண்ணெய்யை பியூர் விஷம் என்று கூறி மார்க்கெட்டில் அதனுடைய விற்பனையை வீழ்த்துவது. அடுத்து, அதற்கு பதிலாக, சில ஜங்க் உணவுகளை விற்பனை செய்வது, அதற்குப் பிறகு ஜங்க் உணவுகள் விஷம் என்று கூறுவது திரும்பவும் நம்மிடம் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்வின் ஜார்ஜ் என்பவர் குறிப்பிடுகையில், ஹார்வர்ட் பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் தேங்காய் எண்ணெய் தவறானது என்று அறிவுரை கூறுகிறார். எனக்கு தெரிந்து ஒரு 10 பேர் தேங்காய் எண்ணெய்யை பயண்படுத்தி 85 - 105 வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளார்கள். அதனால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விகே என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், இதை நான் ஒப்புக்கொள்கிறேன். தென் இந்தியாவில் பல தலைமுறைகளாக மக்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்திவருகிறார்கள். இப்பகுதி இதய நோய் அதிக அளவில் உள்ள பகுதிகளில் ஒன்று. ஹார்வர்ட் பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் அதிக அளவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் பகுதிகளில் ஆய்வு செய்தாரா என்று நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிவிந்துள்ளார்.
ஹார்வர்ட் பேராசிரியர் தேங்காய் எண்ணெய்யை விஷம் என்று கூறியதை அடுத்து, ஆசிய பசிபிக் தேங்கா கம்யுனிட்டி தேங்காய் எண்ணெய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், தேங்காய் எண்ணெய்யை சமையலில் பயண்படுத்தும் கேரளா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மக்கள் பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் தேங்காய் எண்ணெய்யை பியூர் விஷம் என்று கூறியதை விமர்சித்து வருகின்றனர்.