கருணாநிதியை ஜாதி பெயரை கூறி திட்டிய வைகோ: பொன்னார், ஈவிகேஎஸ், அன்புமணி கண்டனம்
சென்னை: தேமுதிக பிளவுபட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி தான் காரணம் எனக் கூறி அவரை தரக்குறைவாக பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக பிளவுபட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி தான் காரணம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கருணாநிதியை ஜாதிப் பெயரை கூறி திட்டி தரைக்குறைவாக அவர் பேசியுள்ளார். திமுகவினர் வைகோவின் உருவ பொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
வைகோவின் அநாகரீக பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொன். ராதாகிருஷ்ணன்
வைகோ இப்படி பேசியுள்ளது மிகவும் அநாகரிகமானது. வேதனை அளிப்பதாக உள்ளது. இப்படி அரசியல் நடத்தும் கட்சிகளை துடைத்தெறிய வேண்டும். வைகோவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இளங்கோவன்
வைகோ கடந்த ஒரு வார காலமாகவே தன்னை மறந்து நிதானம் இன்றி நடக்கிறார். செய்தியாளர்களிடமும் அப்படி தான் நடந்துள்ளார். நேற்று என்னவென்றால் பேண்ட், சட்டை அணிந்து தலையில் முக்காடு போட்டு காவல்துறை அதிகாரியிடம் தேவையில்லாமல் சண்டை போட்டுள்ளார். அரசியலை தாண்டி ஒரு மூத்த தலைவராக உள்ளவர் கருணாநிதி. அனைவராலும் மதிக்கப்படும் அவரை வைகோ ஒருமையில் பேசியதாக கேள்விப்பட்டேன். அது உண்மையில் எனில் வைகோ மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

ஜவாஹிருல்லா
வைகோ நிதானத்தை இழந்து பேசியுள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எதுவாக இருந்தாலும் அளந்து பேச வேண்டும் என்பதை புரிந்து பேச வேண்டும் என்கிறார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா.

அன்புமணி
அரசியலில் உள்ளவர்கள் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும், நாகரிகமாக பேச வேண்டும். அதுவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி தரக்குறைவாக பேசக் கூடாது என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications