வார்டு மறுவரையறை செய்யும் முன்பு உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது: தமிழக தேர்தல் ஆணையம்
சென்னை: வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது என்று மாநில தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது தொடர்பான வழக்கை விசாரித்து வந்தது சென்னை ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி (அப்போதைய) இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்.
இந்த அமர்வு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 2017ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி உத்தரவிட்டும் இதுவரை தேர்தலை நடத்தவில்லை.
எனவே, தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் மீது தி.மு.க. சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, ஆகஸ்டு 6ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
எனினும், ஆகஸ்ட் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கு கூடுதலாக 3 மாதம் அவகாசம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகஸ்ட் 31ம் தேதி தாக்கல் செய்யப்படும் வார்டு மறுவரையறை பரிந்துரைகளை அரசு எப்போது ஏற்றுக்கொள்ளும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, 'அறிக்கை கிடைத்த பின்பு தான் அதுகுறித்து முடிவு செய்யப்படும்' என தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.
தமிழக தேர்தல் ஆணையம் இருப்பதால் எந்த பயனும் இல்லை. ஆணையத்தை கலைத்து விடலாம் என திமுக தரப்பில் வாதிடப்பட்டது.
"வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது. வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக தான்" என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.
பலமுறை அவகாசம் வழங்கிய போதிலும், 2019ம் ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல என்று நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.