துளசி, கார்த்திகா, லட்சுமிமேனன் நடிக்க தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
சென்னை: தமிழ் திரைப்படங்களில் 18 வயது கூட பூர்த்தி அடையாத பெண்களை நடிக்க தடை செய்ய வேண்டும் என்று கோரி முத்துலட்சுமி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.
தமிழகத்தில் இப்படி ஒரு வழக்கு இதுவரை தொடரப்பட்டதில்லை என்பதால் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் 18 வயது கூட நிரம்பாத இளம் பெண்களை சினிமாவில் நடிக்க அனுமதிக்கக் கூடாது. அதைத் தடை செய்ய வேண்டும் என்று முத்துலட்சுமி கோரியிருந்தார்.

மக்கள் கட்சி முத்துலட்சுமி
தமிழ்நாடு மக்கள் கட்சி என்ற கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக இருக்கும் முத்துலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொது நலன் மனுவை நேற்றுத் தாக்கல் செய்தார்.

இளம் பெண்கள் நடிக்கக் கூடாது
அதில், திரைப்படங்களில் 18 வயதுக்கு குறைவான இளம் பெண்களை கதாநாயகியாக நடிக்க வைக்கின்றனர். இந்த சின்ன வயதில், அந்த பெண்களின் மனம் பக்குவம் அடைந்து இருக்காது.

பாலியல் கொடுமை
மேலும், அவர்கள் 18 வயதுக்கு குறைவான வயதில் சினிமாவில் நடிக்க வருவதால், மன ரீதியதாகவும், உடல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் கொடுமைக்கும் ஆளாகுகின்றனர்.

பள்ளி்ப் படிப்பை முடிக்கும் முன்பே
அண்மைக் காலமாக நடிகைகள் சந்தியா, கார்த்திகா, லட்சுமிமேனன், துளசி ஆகியோர் 18 வயது பூர்த்தி ஆவதற்கு முன்பே, பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டு இருக்கும்போதே, நடிக்க வந்துள்ளனர்.

சிறார் நீதிச் சட்டத்துக்கு எதிரானது
இதுபோல் சிறுமிகளை கதாநாயகியாக நடிக்க வைப்பது சிறார் நீதிச் சட்டத்துக்கும், அகில இந்திய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்துக்கும் எதிரானது ஆகும்.

தடை விதிக்க வேண்டும்
எனவே, 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை சினிமா படங்களில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் முத்துலட்சுமி.

அவரவர் விருப்பம்
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் என்ன ஆகவேண்டும் என்ற லட்சியம், கனவுகள் இருக்கும். ஒருவரது நோக்கம் எதுவோ அதன்படி அவர்கள் செயல்படுகின்றனர்.

நீதிமன்றம் தலையிட முடியாது
அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், இதுபோன்ற காரணங்களுக்காக பொதுநல வழக்கும் தொடர முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறி விட்டனர்.

ராதா மகள்கள்
இந்த மனுவில் கூறப்பட்டுள்ள துளசி, கார்த்திகா ஆகிய இருவரும் முன்னாள் நடிகை ராதாவின் மகள்கள். லட்சுமி மேனனும் கூட இளம் நடிகைதான். இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல இளம் நடிகைகள், குறிப்பாக 16 முதல் 18 வயதுக்குட்பட்ட நடிகைகள் பலர் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

ஆபாசம்
சினிமா ஆசை கொண்ட இப்படி டீன் ஏஜ் வயது கொண்ட பெண்கள் பலர் தவறான ஏஜென்டுகளிடம் சிக்கி சீரழியும் நிலையும் தமிழ் சினிமா உலகில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்படி ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications