சசிகலா புஷ்பாவிற்கு இறுகும் பிடி - கையெழுத்து மோசடியை விசாரிக்க ஹைகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: பணிப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சசிகலா புஷ்பா எம்.பி மற்றும் அவரது குடும்பத்தினரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, ஜாமின் வக்காலத்து மனுவில் சசிகலா போலியாக,மோசடியாக கையெழுத் திட்டது பற்றி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா, தாயார் கௌரி ஆகியோர் மீது பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி நாகமலை புதுக்கோட்டை போலீஸார் பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 4 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சசிகலா புஷ்பா சிங்கப்பூரில் உள்ளார். ஆனால், அவர் மதுரைக்கு வந்து வழக்கறிஞர் முன்னிலையில் வக்காலத்து நமுனாவில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். இதில் சந்தேகம் இருப்பதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு ஆகஸ்ட் 26ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா புஷ்பா, அவரது குடும்பத்தினரை கைது செய்ய 6 வாரத்திற்கு தடை விதித்தும், உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 3 பேர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு ஆகஸ்ட் 29ம்தேதி நீதிபதி வி.எம். வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா புஷ்பா, அவரது கணவர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகினர். அப்போது வக்காலத்து நமுனாவில் கையெழுத்திட்டது தான் தான் என சசிகலா புஷ்பா நீதிபதியிடம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு வழங்குவதை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் புதன்கிழமையன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வி.எம். வேலுமணி, "இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரியுள்ள மனுதாரர்கள் மீதான குற்ற்றச்சாட்டு மிகக் கடுமையானது. விசாரணை முடிவில் தண்டனை அளிக்கும் சாத்தியக்கூறு உள்ளது. மனுதாரர்களுக்கு முன் ஜாமீன் அனுமதித்தால், தலைமறைவாக அல்லது தப்பிக்க வாய்ப்புள்ளது.
இவ்வழக்கில் மனுதாரர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொள்வது அவசியமானது என்பதால் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. முன்ஜாமீன் மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. சசிகலா புஷ்பாவின் தாய் கவுரி மூத்த குடிமகளாக இருந்தும், சம்பவத்தைத் தடுக்க தவறிவிட்டார். அவரது முன் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்கிறேன், என்றார்.
இவ்வழக்கில் போலியான ஆவணங்களை இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதை தனி குற்றமாக கருத வேண்டும். இம்மோசடி நீதிமன்றத்திற்கு வெளியில் நடந்துள்ளது. அதை விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. முன்ஜாமின் மனு வக்காலத்தில் யார், யார் கையெழுத்திட்டுள்ளனரோ அவர்கள் மீது உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் (நீதித்துறை) மதுரை புதுார் போலீசில் புகார் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட ஆவணங்களை போலீசில் தாக்கல் செய்ய வேண்டும். சட்டப்படி போலீசார் விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பணிப்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரிலும், போலி கையெழுத்து மோசடி புகாரிலும் சசிகலா புஷ்பாவிற்கு எதிராக பிடி இறுகுவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications