அங்கீகரிக்கப்படாத மனை: ரியல் எஸ்டேட் சட்டத்தை திருத்தம் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
ரியல் எஸ்டேட் தொடர்பாக தமிழக அரசு சட்டத்தை திருத்தம் செய்ய கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ரியல் எஸ்டேட் சட்டத்தில் தேவைப்பட்டால் அரசு சட்டத்தை திருத்தம் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத மனைகளை பதிவு செய்ய தடை கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட்களாக மாற்றுவது குறித்து அரசுதான் கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அதற்காக அவர்கள் சட்டத்தை திருத்திக் கொள்ளலாம். ரியல் எஸ்டேட்டிற்கும் எதிரானது அல்ல நீதிமன்றம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த விசாரணையின் போது, வழக்கை தொடர்ந்த யானை ராஜேந்திரன், இந்த வழக்கு தொடர்பாக மிரட்டப்படுவதாக நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். அதற்கு இதுகுறித்து மனுதாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து யானை ராஜேந்திரன் கூறும்போது, "இந்த வழக்கைத் தொடர்ந்ததில் இருந்து செல்போன் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது பரவாயில்லை. நேற்று நீதிமன்ற வளாகத்திலேயே நான் மிரட்டப்பட்டேன். ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார்கள். வெளியில் அதை சொல்ல முடியாது. இதனை வழக்கறிஞர்கள்தான் செய்கிறார்கள்" என்று தெரிவித்தார்.