ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி வழக்கு தள்ளுபடி
ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய திமுக எம்.எல்.ஏ. சக்கரபாணி மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா ஒட்டன்சத்திரம் சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் தினகரன் ஆதரவு 4 எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்குகள் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் பெஞ்ச் தீர்ப்பளித்தனர்.

அதில், 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆகையால் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications