போலீ்ஸ் என்கவுண்டர்கள் எல்லாம் கொலைகள் அல்ல... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சென்னை: சென்னை அருகே இரண்டு பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை ஆய்வாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் போலீஸ் என்கவுண்டர்கள் அனைத்தும் கொலைகள் என்று கருத முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த நீலாங்கரையில் 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு ஆகியோரை காவல்துறை ஆய்வாளர்கள் நந்தகுமார், மகேந்திரன் ஆகியோர் சுட்டுக் கொன்றனர்.
இந்த ஆய்வாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் வந்த வாகனத்தை விசாரணைக்காக காவல்துறையினர் வழிமறித்த போது தாக்கியுள்ளனர். இதில் காவல்துறையினர் சிலர் காயமடைந்துள்ளனர்.
அப்போது தற்காப்புக்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் இறந்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக, இறந்தவர்களின் குடும்பத்தினர் வாக்குமூலத்துடன் கோட்டாட்சியர் சமர்ப்பித்த விரிவான விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மனுதாரரும் இந்த அறிக்கையை எதிர்க்கவில்லை.
மேற்படி சம்பவத்தில் காயமடைந்த போலீஸ்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
போலீஸ் என்கவுண்டர் சம்பவத்தில் ஒருவர் இறந்தார் என்றால் அதை கொலை வழக்காகத்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications