கைதில் இருந்து தப்பினார்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் கொடுத்தது ஹைகோர்ட்!
சென்னை: கொலை மிரட்டல் வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் முன் ஜாமீன் அளித்துள்ளது. இதனால் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக அவர் தப்பியுள்ளார்.
சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது.
இந்த களேபரத்துக்கு மத்தியில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில் பணியாற்றும் வளர்மதி என்ற ஊழியர் இளங்கோவன் மீது அதிரடி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், காமராஜர் அரங்கத்துக்கு சொந்தமான வணிக வளாக கடைகளின் வாடகையில் இளங்கோவன் மோசடி செய்கிறார். இது பற்றி புகார் கொடுத்தததற்காக கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த 2 விவகாரங்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையமும் இளங்கோவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இளங்கோவன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதனால் தாம் கைது செய்யப்படுவோம் என அஞ்சிய இளங்கோவன், உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை வெள்ளிக்கிழமையன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன், இளங்கோவன் மனு மீது திங்கள்கிழமையன்றுதான் விசாரணை நடைபெறும். அதுவரை கைதுக்கு தடை விதிப்பு போன்ற எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது. இதனிடையே இளங்கோவன் திடீரென டெல்லி சென்றார். அவர் வழக்கமாக டெல்லி நகருக்குள்தான் தங்குவார். ஆனால் தமிழக போலீசார் கைது செய்வார்களோ என அஞ்சி அவர் நொய்டா பகுதியில் தங்கி இருந்தார். அவரைத் தேடி தமிழக போலீசார் டெல்லி விரைந்தததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் முன் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில், இளங்கோவன் நாகர்கோவிலில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினார் நீதிபதி வைத்யநாதன்.