ஆம்பூர் கலவரம்.. 118 பேருக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்தது சென்னை ஹைகோர்ட்!
சென்னை: ஆம்பூரில் கடந்த மாதம் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 118 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
ஆம்பூரில் பவித்ரா என்ற இளம்பெண் மாயமானார். இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்குச் சென்ற இளைஞர் ஷமீல்அகமது கடந்த ஜூன் 26-ந் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து ஜூன் 27-ந் தேதி ஆம்பூரில் கலவரம் வெடித்தது. இதில் போலீஸாரும் பொதுமக்களும் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் டவுன் போலீஸார் 118 பேரை கைது செய்தனர். பின்னர் பவித்ரா சென்னையில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீசார் கடந்த 7-ந் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 118 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இன்று அனைவருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
சேலம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.