அதிமுக பொதுச்செயலராக நியமிப்பதை எதிர்த்து சசிகலா புஷ்பா வழக்கு: சசிகலாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில் சசிகலா நடராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலராக சசிகலா நடராஜன் நியமிக்கப்படுவதை எதிர்த்து சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்படுவதை எதிர்த்து அக்கட்சியில் இருந்து இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில் சசிகலா நடராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலராக முயற்சித்து வருகிறார். இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னை போயஸ் தோட்டம் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு சசிகலாவிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அதிமுக சார்பு ஊடகங்களும் சசிகலாவை 'சின்னம்மா' என்ற அடைமொழியுடன் முன்னிலைப்படுத்தி வருகின்றன. அதே நேரத்தில் அதிமுக தொண்டர்கள் சசிகலா பொதுச்செயலராவதை கடுமையாக எதிர்க்கின்றனர்.
அத்துடன் 5 ஆண்டுகாலம் தொடர்ந்து கட்சி உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி அதிமுகவின் பொதுச்செயலராக முடியும்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் சசிகலாவுக்காக கட்சி விதிகளையே தளர்த்துவோம் என பொன்னையன் தெரிவித்திருந்தார்.
இதனிடையே சசிகலா நடராஜன், அதிமுக பொதுச்செயலராவதை எதிர்த்து அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சசிகலா நடராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.