உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று காலக்கெடு நிர்ணயித்து 4 வாரத்தில் பதில் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலக்கெடு நிர்ணயிக்க கோரிய வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர், செயலர் உள்ளிட்டோருக்கு ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தக் கோரி திமுக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழ அரசும், மாநில தேர்தல் ஆணையமும் கூட்டாக செயல்பட்டு தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டினர். அப்போது தேர்தல் நடத்த ரூ.125 கோடி செலவு செய்த நிலையில் திமுக தொடர்ந்த வழக்கால் தான் தேர்தல் ரத்தானது என்று தேர்தல் ஆணையம் வழக்கு விசாரணையின் போது எடுத்துச் சொன்னது.
இந்நிலையில் மே 14க்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டும் ஏன் நடத்தவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலக்கெடு நிர்ணயித்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசின் செயலர் உள்ளிட்டோருக்கு ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.