அதிமுக எம்எல்ஏக்களின் நிலை என்ன? உணவு வழங்கப்படுகிறதா? காஞ்சி கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு!
ரிசார்ட்டுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் நிலை என்ன? அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா? என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மன்னார்குடி கோஷ்டியிடம் கைதிகளாக சிக்கியிருப்பதாக கூறப்படும் எம்.எல்.ஏ.க்கள் நிலை என்ன? அவர்களுக்கு உரிய உணவு வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அப்படியே 3 பேருந்துகளில் ஏற்றி பல இடங்களில் கைதிகளாக சிறை வைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி.
உண்ணாவிரத போராட்டம்
கடந்த 2 நாட்களாக பல இடங்களில் இந்த எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மகாபலிபுரம் அடுத்த கூவத்தூர் ரிசார்ட் ஒன்றிலும் எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சில எம்.எல்.ஏக்கள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
சென்னை ஹைகோர்ட்டில் விசாரணை
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை 2-வது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவது தொடர்பாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆட்சியருக்கும் உத்தரவு
இது தொடர்பாக தமிழக அரசும் காவல்துறையும் திங்கள்கிழமையன்று பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் சிடி செல்வம், மதிவாணன் பெஞ்ச் உத்தரவிட்டது. அத்துடன் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அதிமுக எம்.எல்.ஏக்கள் நிலை என்ன? அவர்களுக்கான உணவு வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அலறிய மன்னார்குடி கோஷ்டி
இந்த உத்தரவைத் தொடர்ந்தே கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்கள் சிலரை வேண்டுமென்றே வெளியே அனுப்பி செய்தியாளர்களை சந்தித்து, எங்களை யாரும் கடத்தவில்லை; நாங்கள் சொந்த செலவில் தங்கியுள்ளோம்' என கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்க செய்தது மன்னார்குடி கோஷ்டி.