நம்பிக்கை வாக்கெடுப்பில் மோசடி.. ஸ்டாலின் மனுவிற்கு பதில் அளிக்க முதல்வருக்கு ஹைகோர்ட் உத்தரவு
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுபபு தொடர்பான வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு, கடந்த பிப்ரவரி 18ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் தனபாலிடம் ரகசிய வாககெடுப்பு நடத்த கோரினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் கடும் அமளி நிலவியது. அப்போது அவை காவலர்களால் திமுகவினர் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இதில் ஸ்டாலினின் சட்டை கிழிந்தது. இதனிடையே 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவு பெற்று எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இந்த வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரியும் ஆளுநர் பொறுப்பு வித்யாசாகர் ராவிடம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் முறையிட்டனர். எனினும் பலனில்லை.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் விதிமுறைகள் மீறப்பட்டதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கானது இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில விசாரணைக்கு வந்தது.
அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு பதில் மனுவை வரும் 13-ஆம் தேதி தாக்கல் செய்வதாக வழக்கறிஞர் கருப்பசாமி தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கை வரும் மே 2,3 ஆகிய தேதிகளில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தி விசாரணை நடத்தபபடும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.