தொண்டையில் குண்டு பாய்ந்த சிறுவனுக்கு தொடர் சிகிச்சை.. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரால் தொண்டையில் துப்பாக்கியால் சுடப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரிக்கு தமிழக அரசு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலாங்கரை ஜே 8 காவல் நிலையத்திற்கு திருட்டு வழக்கு ஒன்றுக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தான் தமீம் அன்சாரி என்ற 16 வயது சிறுவன். அப்போது விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் என்பவர் சிறுவனின் தொண்டையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி விசாரித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து தொண்டையில் குண்டு பாய்ந்து விட்டது.
இதையடுத்து ஆபத்தான நிலையில் சிறுவனை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டரின் விசாரணை முறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவன் சிறுவன்தானே, இப்படித்தான் கொடூரமாக விசாரிப்பதா என்று மக்கள் பதைபதைத்துப் போயுள்ளனர். இந்த நிலையில் புஷ்பராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக தாம்பரம் தாசில்தார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரும் விசாரணை நடத்தி காஞ்சிபுரம் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில், காவல்துறை வரம்பு மீறி செயல்பட்டுள்ளதாகவும், குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சிறுவன் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது தொடர்பாக விரிவான விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமீம் அன்சாரி சுடப்பட்டது தொடர்பாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தக் கோரியும், மகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க கோரியும் சிறுவனின் தாயார் சபினா பேகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவன் தமீம் அன்சாரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications