திமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தை நடத்தலாம், பாதுகாப்பு கொடுங்கள் - உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை எண்ணூரில் திமுக திட்டமிட்டிருந்த தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்துக்கு சென்னை காவல்துறை விதித்திருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும் கூட்டத்துக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அது மாநகர காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநிலத்தின் பல இடங்களில் நிதியளிப்பு கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. அதன்படி சென்னை ஒரு நிதியளிப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதற்கான இடத்தை தேர்வு செய்து கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வந்த நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று கூறி கூட்டத்துக்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்தது.
இதை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த தனியரசு உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் காவல்துறையிடம் விளக்கம் கேட்டது. அதற்கு மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்தனர். நிபந்தனையுடன் கூட்டத்தை நடத்தலாம், கூட்டத்துக்குத் தேவையான பாதுகாப்பை போலீஸார் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
நாளை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.