நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி வக்கீல் புகழேந்தி தொடர்ந்த வழக்கு - ஹைகோர்ட் தள்ளுபடி
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறினர்.
வழக்கறிஞர் பி.புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் மற்றும் முதல்வருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவியது. இந்தசூழலில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தமிழக முதல்வராக கே.பழனிசாமியை தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மையை நிரூபிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
அதன்படி முதல்வர் கே.பழனிசாமி, பிப்ரவரி 18ஆம் தேதி தனது தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதில் 122 அதிமுக எம்எல்ஏ.க்கள் முதல்வர் கே.பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
உட்கட்சி பூசல்
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. ஆனால் தற்போது அதிமுகவில் உச்சகட்ட உட்கட்சி பூசலால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த சூழலில் 19 எம்எல்ஏ.க்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனக்கூறி தங்களது ஆதரவை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் இதுதொடர்பாக தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவிடமும் நேரடியாக தங்களது கடிதங்களைக் கொடுத்துள்ளனர்.
ஆளுநர் உத்தரவிடவில்லை
இதனால் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டது.
ஆனால் இதுவரை தமிழக ஆளுநர், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எந்த உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை.
கடமை செய்ய தவறிய ஆளுநர்
தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவரும் இதுதொடர்பாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஒரு அசாத்தியமான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி தனது கடமைகளை செய்யத் தவறி விட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கை தேவையற்ற குதிரை பேரத்துக்குத்தான் வழிவகுக்கும் என்றார்.
ஆளுநர் தரப்பு வழக்கறிஞர்
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம்.சுந்தர் அமர்வு முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆளுநர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் விஜய்நாராயணன் வாதத்தின் போது கூறியதாவது.
ஒரு கட்சி மூன்றில் ஒரு பங்கு பிளவு பட்டால் அது பெரும்பான்மை இழந்ததாக கருதப்படும். அப்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால் தற்போது அதிமுகவில் 19 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கடிதம் கொடுத்துள்ளனர். அதை பிளவாக கருத முடியாது.
அரசுக்கு எதிராக கடிதம் அளிக்கவில்லை
எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக கடிதம் கொடுக்கவில்லை. அவர்கள் முதல்வருக்கு எதிராகத்தான் கொடுத்துள்ளனர். ஆகவே அது அவர்கள் உட்கட்சி பிரச்சினை. ஆகவே சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிடும் தேவை வரவில்லை. மேலும் மு.க.ஸ்டாலின் கொடுத்த மனு அடிப்படையில் பொதுநலவழக்கு போடப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டவரோ, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியோ இல்லாத பட்சத்தில் வழக்குத் தொடர அவருக்கு முகாந்திரம் இல்லை.ஆகவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தலைமை நீதிபதி அமர்வு
புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அரசு தரப்பை நிரூபிக்க வேண்டுகோள் வைத்து வாதாட பொதுமக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படையில் உரிமை உண்டு என்று தெரிவித்தார். ஆளுநர் தரப்பில் இந்த மனுவை ஏற்கக் கூடாது என்று தாம் வாதாட உள்ளதாக அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதை அடுத்து வழக்கை தலைமை நீதிபதி அமர்வு ஒத்தி வைத்தது.
புகழேந்தி வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறினர்.