அரசு அலுவலகங்களில் ஜெ.படத்தை அகற்ற தடை விதிக்க முடியாது.. உயர்நீதிமன்றத்தில் மனு டிஸ்மிஸ்!
சென்னை: அரசு அலுவலகங்களில் இருந்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி இதுதொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

இந்தியாவில் அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு படங்களையும், தமிழகத்தில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், காந்தி, நேரு மற்றும் திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், ராஜாஜி, பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரது படங்களை வைக்கலாம்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்ததையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் படம் இன்னும் அகற்றப்படவில்லை.
அரசு அலுவலகங்கள், அரசின் திட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் பெயர் மற்றும் அவரது படங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'அரசு அலுவலகங்களில் யாருடைய புகைப்படங்களை எல்லாம் வைக்கலாம் என்பது தொடர்பாக அரசு ஒரு நிலையான கொள்கையை வகுக்க வேண்டும்.
தற்போது உள்ள நிலவரப்படி, அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் படத்தை வைத்துக்கொள்ளலாம் என்றே அரசு கொள்கை கொண்டுள்ளது.
எனவே, அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதா படங்களை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications