குட்கா விவகாரம்: திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அக்.12 வரை தடை: ஹைகோர்ட் உத்தரவு
திமுக எம்எல்ஏக்கள் மீது அக்டோபர் 12ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சட்டசபையில் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக அக்டோபர் 12ஆம் தேதி வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து சென்னையில் திமுக மேற்கொண்ட களஆய்வில் பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும், இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தனர்.
திமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்
அதன்படி உரிமை குழு கூட்டம் கூடியது. அதில் திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரிமைக்குழுவிடம் விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் கோரினார்.
ஹைகோர்ட்டில் வழக்கு
சட்டசபை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க. ஸ்டாலின் ஹைகோர்ட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்ந்தார். தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடைகளில் போலீஸ் உதவியோடு விற்பனை செய்கிறார்கள். இதை நிரூபித்த திமுக உறுப்பினர்களை உரிமை குழு நோட்டீஸ் என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர திட்டமிட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
நடவடிக்கை எடுக்க தடை
அந்த வழக்கானது கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கானது செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
அக்டோபர் 12க்கு ஒத்திவைப்பு
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மறு உத்தரவு வரும்வரை குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக சபாநாயகர் தனபால் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.