விஜயகாந்த், பிரேமலதா மீதான 14 அவதூறு வழக்குகள் விசாரணைக்கு தடை: ஹைகோர்ட்
சென்னை: விஜயகாந்த், பிரேமலதா மீதான 14 அவதூறு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதி்த்துள்ளது. விஜயகாந்த், பிரேமலதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பொதுக்கூட்டங்கள், பேட்டி, அறிக்கைகள் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை அவதூறாக சித்தரித்து பேசியதாக தமிழ்நாடு முழுவதும் 14 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்தும், பிரேமலதாவும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த 14 கிரிமினல் அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் கடந்த 2012ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக, கடந்த 2012ம் வருடம் நவம்பர் மாதம் 23ம் தேதி அரசு வழக்கறிஞர் குலோத்துங்கன் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பல முறை விஜயகாந்த் நேரில் ஆஜராகாத காரணத்தினால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷீமா பானு உத்தரவிட்டார்.
இதேபோல், கடந்த மாதம் முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விஜயகாந்துக்கும், அவரது மனைவி பிரேமலதாவுக்கும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து தடையாணை வாங்கப்பட்டது.
இந்த நிலையில் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்தும், பிரேமலதாவும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த 14 கிரிமினல் அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.