நீதிமன்ற அவமதிப்பு: சென்னை கலெக்டர், போலீஸ் கமிஷனரை மாற்ற ஹைகோர்ட் இடைக்கால தடை
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோரை இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள பி அன்ட் சி மில் வளாகத்தில் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. சமீபத்தில் மில் மூடப்பட்டதையடுத்து குடியிருப்புகளை காலி செய்யும்படி தொழிலாளர்களிடம் கூறப்பட்டது.
இதை எதிர்த்து இளங்கோவன் என்பவர் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "மில் அமைந்திருக்கும் இடம் அரசுக்கு சொந்தமான இடம். அந்த இடத்தை தனியாருக்கு விற்க முடியாது. அந்த இடத்தை வாங்கிய நபர் எங்களை அங்கிருந்து காலி செய்யும்படி வற்புறுத்தி வருகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலாளர்களை தொந்தரவு செய்யக் கூடாது, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு மே 8 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், குடியிருப்பில் 6 வீடுகள் இடிக்கப்பட்டன.
இது தொடர்பாக எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தில் புகார் கூறப்பட்டது. ஆணைய உறுப்பினர்கள் குடியிருப்பு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர், தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும், மாற்று ஏற்பாடுகள் செய்யவும் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் சென்னை ஆட்சியர் சுந்தரவல்லி, சென்னை மாநகர் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோரை சென்னையில் இருந்து வேறு பகுதிக்கு இடமாறுதல் செய்வது தொடர்பாக தலைமை செயலரும், உள்துறை செயலரும் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ், ஆட்சியர் சுந்தரவல்லி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மற்றும் கலெக்டர் சுந்தரவல்லி ஆகியோரை இடமாற்றம் செய்ய தனி நீதிபதி அளித்த பரிந்துரைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.