அசோக் நகர் கொலைவழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை அசோக்நகர் டாமின் சரவணன் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் கீழ் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பினை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மறுவிசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கனிமவளத்துறையின் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுப்பெற்ற எஸ்.சரவணன் என்ற டாமின் சரவணன். இவர், மனைவி கஸ்தூரி, வேலைக்கார பெண் அன்பரசி ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி அவர்களின் வீட்டில் மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்கள்.
வீட்டில் இருந்த விலை உயர்ந்த தங்க, வைர நகைகள், அமெரிக்க டாலர்கள் உட்பட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் வேளச்சேரியை சேர்ந்த முகமது யாசின், அசோக்நகரை சேர்ந்த உதயகுமார், பேரூரை சேர்ந்த மோகன்தாஸ், அவரது மனைவி சத்திய பாமா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து மறுவிசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ. இணை இயக்குனருக்கு உத்தரவிடுகிறோம்.
இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்களை தவிர, இந்த வழக்கில் மேலும் தொடர்புள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கிறோம்.
இந்த 4 பேரும் ரூ.25 ஆயிரம் உத்தரவாதமும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் விசாரணைக் கோர்ட்டில் வழங்கி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை 4 பேரும் விசாரணைக் கோர்ட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலையில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும். சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு 4 பேரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications