ஏம்ப்பா நீ "டான்"னா.. அப்ப நான் யாருப்பா??
சென்னை: சோட்டா ராஜன் சரணடைந்தது போல சரணடைய நானும் தயார். என் மீதான வழக்கை நியாயமான முறையில் நடத்தினால்.. இப்படிக் கூறியுள்ளார் தனபாலன் ஸ்ரீதர். பெயரைக் கேட்டதும் ஏதோ ஆபீஸில் வேலை பார்ப்பவர் என்று நினைத்து விடாதீர்கள். இவர் ஒரு டான்..! (இவர் "டான்"னா.. அப்ப சோட்டா ராஜன் யாருப்பா??)
தனபாலன் ஸ்ரீதர் என்றால் சென்னையில் அவரது குடும்பத்தைத் தாண்டி யாருக்குமே தெரியாது.. ஆனால் டான் ஸ்ரீதர் என்றால் ஒட்டு மொத்த டான் கூட்டங்களுக்கும் ரொம்ப நன்றாகத் தெரியுமாம்.
இவர் என்ன அப்படியாப்பட்ட டான் என்று உங்களுக்கே சந்தேகம் வரும்.. செய்தியை அடித்தபோது எனக்கும் கூட அதே சந்தேகம்தான் வந்தது. இவரது முகத்தைப் பார்த்தால் லேசாக சிரிப்பு கூட வந்தது. ஆனால் இவர் மீது 7 கொலை உள்பட 43 வழக்குகள் இருக்கிறதாம்.
"ரியல்" டான் பாஸ்!
சோட்டா ராஜன் பெயரைக் கேட்டாலே பலருக்கு மும்பையில் டரியல் ஆகும். ஆனால் இந்த ஸ்ரீதர் ஒரு ரியல் டான்.. அதாவது ரியல் எஸ்டேட் டான் பாஸ். ரியல் எஸ்டேட் மட்டும்தான் இவரது ரகளை ஏரியா.
தமிழகத்தின் தாவூத்தாம்
இவரை தமிழகத்தின் தாவூத் என்று செல்லமாக கூப்பிடுகிறார்கள்.. ஆமாங்க, தமிழக போலீஸே அப்படித்தான் கூப்பிடுது. தமிழக காவல்துறையால் அதிகம் தேடப்படும் நபராம் இவர்.
இவரும் துபாய்தான்
இவரும் துபாயில்தான் நிலை கொண்டுள்ளார். சென்னைக்கு அருகே ரூ. 500 கோடி மதிப்பிலான ரியல் எஸ்டேட் ரவுடித்தனத்தை செயல்படுத்தி வருகிறார். பல வருடமாக தலைமறைவாகவும் இருக்கிறார்.
சரணடைய தயார்
இந்த நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் சரணடைய தயாராக இருப்பதாகவும், நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என டிஜிபியும். ஏதாவது ஒரு நல்ல ஐஏஎஸ் அதிகாரியும் உத்தரவாதம் அளித்தால் தான் சரணடையத் தயார் என்றும் கூறியுள்ளார் ஸ்ரீதர்.
சாராயமும் விற்றவர்தான்
பார்க்க டீசன்ட்டாக தெரிந்தாலும் ஒரு காலத்தில் காஞ்சிபுரம் பக்கம் கள்ளச்சாராயம் விற்றுள்ளாராம். இப்போது "தம்பி"க்கு 43 வயதாகிறது. தான் சரணடைந்தால் சுட்டுக் கொன்னுடுவாங்க என்றும் பயப்படுகிறார் இந்த டான்!
செத்துப் போயிருவேன்.. சொல்லிட்டேன்!
தனது பேட்டியின்போது அவர் கூறுகையில், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் காட்ட வேண்டும். அதில் உண்மை இருந்தால் நானே சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் சவால் விடுகிறார்.
மோசமானவர்களிலேயே முக்கியமானவராம்
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில் எங்களிடம் 20 மோசமான கிரிமினல்களின் பட்டியல் கையில் உள்ளது. அதில் முதலிடத்தில் இருப்பவர் இவர் என்றார்.
2013ல் எஸ்கேப் ஆனார்
2013ம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் இந்தியாவிலிருந்து தப்பியுள்ளார் ஸ்ரீதர். அது முதல் இவர் தலைமறைவாக இருக்கிறாராம். துபாயில் பதுங்கி இருந்தபடி தனது வேலையைச் செய்து வருகிறாராம்.
நான் என்ன புத்தனா.. காந்தியா
தனது பேட்டியின்போது ஸ்ரீதர் மேலும் கூறுகையில், நான் புத்தரோ அல்லது காந்தியோ அல்ல.. சாதாரண மனிதர். இயேசுநாதரும் கிடையாது. என்னை யாராவது அடித்தால் திருப்பி அடிப்பேன். இயேசுவையே காட்டிக் கொடுத்த உலகம்தானே இது என்று வியாக்கியானமும் பேசியுள்ளார்.
சரித்தான்!
படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்