இயற்கை பிரசவ விளம்பரத்தால் கைதான, ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்!
கோவை: ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இயற்கை முறையில் உடல்நல பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி சிகிச்சையளித்து வந்தவர் ஹீலர் பாஸ்கர். வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க ஒரு நாள் பயிற்சி என இவர் செய்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வந்த புகார்களை தொடர்ந்து, கடந்த 2ம் தேதி ஹீலர் பாஸ்கர் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் குனியமுத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஹீலர் பாஸ்கர் கைதுக்கு வரவேற்பு ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர், ஹீலர் பாஸ்கர் கைதுக்கு, எதிர்ப்பு தெரிவித்தனர்.
மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்ய இருந்தார் என்ற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கி இருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு முற்றிலும் எதிரானதாகும் என்று சீமான் கூறியிருந்தார்.
சரியான விசாரணைகள் இல்லாமல் தவறான நோக்கத்தோடு ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுவதை தமிழக உளவுத்துறை கவனிக்க வேண்டும் என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், ஹீலர் பாஸ்கரின் ஜாமீன் மனுவை விசாரித்த கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 30 நாட்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications