விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம், சரத்குமாரிடம் 6 மணி நேரம்.. ஐடி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை முடிவுற்றது.
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் நடத்திய விசாரணை தற்போது முடிவு பெற்றது. அதேபோல் சரத்குமாரிடம் 6 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட விசாரணை முடிவு பெற்றது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணம் வினியோகிப்பதாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அலுவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடு, நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது.
இதில் ரூ.89 கோடி வரை ஆர்.கே. நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது. மேலும் அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதுதொடர்பான சோதனை அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது.
இந்நிலையில் மேற்கண்ட 3 பேரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணை அதிகாரியான துணை இயக்குநர் ராஜமாணிக்கம் முன்பு ஆஜரானார். முன்னதாக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரனும் ஆஜரானார்.
இதைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாரும் ஆஜரானார். அவர்களிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்துவிட்டது. அதிகாரிகள் துறை ரீதியாக கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்ததாக செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் சரத்குமாரிடம் 6 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற விசாரணையும் முடிவுற்றது. மேலும் சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையும் முடிவடைந்தது.
வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கீதாலட்சுமி ரிட் தாக்கல் செய்துள்ளதால் அவர் ஆஜராகவில்லை.












Click it and Unblock the Notifications