சென்னையில் வெளுத்து வாங்கும் வெயில்… 106 டிகிரியை தொடப்போகுது!
சென்னை: அக்னி நட்சத்திரத்தின் அதிரடி ஆட்டம் தொடங்கியுள்ளது. சென்னையில் அடுத்த, 48 மணி நேரத்தில் வெப்பநிலை, 41 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம், இம்மாதம், 4ம் தேதி துவங்கியது. மழையோடு தொடங்கியதால் வெயில் தெரியாமல் குளுமையான சூழல் நிலவியது.
ஆனால் ஒருவார காலத்திற்குப் பின்னர் கடந்த ஞாயிறுமுதல் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் 28ம் தேதி வரை நீடிப்பதால் இனி வெயிலின் அதிரடி தாக்குதலில் இருந்து தப்புவது கடினம் என்று எச்சரிக்கின்றனர் வானிலை ஆய்வுமைய அதிகாரிகள்.
சென்னையில் 104
இந்நிலையில், நேற்று பகலில், சென்னையில் வெப்பநிலை 104 டிகிரியை தொட்டதாக தெரிய வந்துள்ளது.
சென்னை, விமான நிலையம் பகுதியில், 102.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. நேரம் செல்லச் செல்ல சென்னை நகரை விட, மீனம்பாக்கம் பகுதியில், வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, அனல் காற்று அதிகரித்து காணப்படுகிறது.
திருவள்ளூரில் 105.8
திருவள்ளூர் - திருத்தணியில் அதிகபட்சமாக, 105.8 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
வெயிலூரான வேலூர்
அதேபோல திருச்சி மற்றும் வேலூரில், 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
வெப்பநிலை மேலும் உயரும்
சென்னை வானிலை மைய தகவலின்படி, அடுத்த, 24 மணி நேரத்தில், 104 டிகிரி செல்சியஸ் மற்றும் 48 மணி நேரத்தில், 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையான 16ம் தேதி, அக்னி நட்சத்திர கால உச்ச பட்ச வெப்பம் பதிவாகும் என, கூறப்படுகிறது. எனவே, தொடர்ந்து வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கொஞ்சம் குளுமை
இதற்கிடையில், வெப்பச் சலனம் காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், பழநி, மதுரை மாவட்டம் பேரையூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் மழை பெய்துள்ளது.
மழை நீடிக்கும்
மேலும் கரூர் மாவட்டம் தோகமலை, ஈரோடு மாவட்டம் தாளவாடியிலும் ஓரளவிற்கு மழை பெய்துள்ளது. இம்மழை, இன்னும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.