வான் மேகம் பூப்பூவாய் தூவும்.. இன்னும் 5 நாட்களுக்கு.. குடையோட வெளியே போங்க!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், " ஜூன் முதல் நாள் முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி( நேற்று) வரை தமிழகத்தில் 244 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.
இது வழக்கத்தை விட 23 சதவிகிதம் அதிகம். கடந்த 5 ஆண்டுகளில் இதுவே தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த அதிக மழை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கூடுதலாக பெய்துள்ளது.வழக்கமான மழையை விட நடப்பாண்டு 23% கூடுதலாக மழை பெய்துள்ளது. சென்னையைப்பொறுத்த வரை இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது" என்று கூறினார்.
மாநிலத்தில் நேற்று பெய்த மழையின் அதிகளவாக செஞ்சியில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. செப்டம்பர் 1 முதல் 5 வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.