இரவெல்லாம் பொத்துக் கொண்டு ஊற்றிய மழை.. குளிர்ந்தது சென்னை!
சென்னை: வானம் பொத்துக் கொண்டதோ எனக் கேட்கும் அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து இன்று அதிகாலை வரை சென்னையில் கொட்டித் தீர்த்தது மழை.
இதனால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில தினங்களாக கோடைக்கு நிகராகக் கொளுத்திய வெயிலுக்கு இதமாக அமைந்தது இந்த மழை.

தென்மேற்கு பருவமழை கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது.
சென்னையை பொருத்தமட்டில் நேற்று காலையில் வானம் தெளிவாக காணப்பட்டது. பகலெல்லாம் வெளியில் கொளுத்தியது. இரவு சுமார் 11.15 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சென்னை நகருக்குள் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
நள்ளிரவுக்குப் பிறகு, மடிபாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ய ஆரம்பித்தது.
இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வடிய இடமின்றி சாலையில் தேங்கிய மழை நீரில் வாகனங்கள் தத்தளித்தப்படி சென்றது.
திடீர் மழையை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்தப்படி சென்றனர். பலத்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்ததால், பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின. சில இடங்களில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை மின்சாரம் தடைப்பட்டது.
சாலையில் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications