ஜில்லென்று மழையோடு விடிந்த சென்னை...!
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வடமேற்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. நேற்று லேசான வெயிலும், பின்னர் மழையும் என சென்னையில் வானிலை மாறி மாறிக் காணப்பட்டது. மாலை முதல் மழை தீவிரமானது.
இந்நிலையில், இன்று சென்னை மழையோடு தான் விடிந்தது. சென்னையின் பல இடங்களில் இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. சென்னை கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம், தாம்பரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையின் காரணமாக, துபாய், கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தன. பின்னர் அவை பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
கனமழை காரணமாக சென்னை சாலையில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.