சென்னையில் மாறியது வானிலை... புறநகர்களில் கனமழை... தீபாவளிக்கு வெளியூர் செல்வோர் பாதிப்பு
சென்னையில் இன்று காலை முதலே வானிலை மாறியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் தீபாவளிக்கு ஊருக்கு செல்வோரை பாதிப்புக்குள்ளாக்கியது.
Recommended Video

சென்னை: சென்னையில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர் பரிதவித்தனர்.
சென்னையில் இன்று காலையில் நகரின் வெப்பநிலை அடியோடு தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் தூரல் இருந்தது. மேலும் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் இன்னும் 2 நாள்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

லேசான மழை
இதை வடகிழக்கு பருவமழையின் முன்னோட்டமாக பொதுமக்கள் பார்க்கின்றனர். சென்னையில் முகப்பேர், கிண்டி, ராமாபுரம், அண்ணாநகர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கோயம்பேடு, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே லேசான மழை பெய்தது.

புறநகர்களில் மழை
சென்னையின் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, மீனம்பாக்கம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளதால் மக்கள் சிறிது கவலை அடைந்துள்ளனர்.

மழையால் பாதிப்பு
இன்று காலை முதலே ஆங்காங்கே மழை பெய்து வருவதால் தீபாவளிக்கு வெளியூர் செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கோயம்பேடு, பூந்தமல்லி, அண்ணாநகர், கே.கே.நகர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

வாகன நெரிசல்
இந்த மழையால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, வடபழனி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஆமை வேகத்தில் கடக்கின்றன. நீண்ட தூரம் பயணிக்க வேண்டியவர்கள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டாசு வியாபாரம்
சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் வானிலை மாற்றத்தால் நடைபாதையில் துணி, வளையல், பொட்டு, அழகு சாதன பொருள்களை விற்கும் வியாபாரிகளின் விற்பனை இந்த திடீர் மழையால் பாதிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு முன்னரே களைகட்டும் பட்டாசு வியாபாரம் தற்போது மழையில் நனைந்து நமத்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications