சென்னையில் விடிய விடிய கனமழை... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களிலும் மழை பெய்துவருகிறது.
விடிய விடிய கனமழை
சென்னையில் நேற்று காலை முதலே மழை கொட்டிவருகிறது. இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. விடிய விடிய பெய்து வரும் கனமழையால் சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.
தேங்கிய தண்ணீர்
நீர் வடியாமல் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு ஆளாகியுள்ளனர். தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னையில் கனமழை தொடர்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி
மேலும் சிவகங்கையில் கொட்டிவரும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், தூத்துக்குடி நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மழை நீடிக்கும்
வடகிழக்குப் பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது தொடங்கியுள்ள மழை இன்னும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.