மார்கழியில் ஜில்லென்ற மழை... குடையோடு வெளியே போங்க - எச்சரிக்கும் வானிலை
மார்கழி மாதத்தில் ஜில்லென்ற மழை பெய்கிறது. மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மார்கழி மாதத்தில் குளிர் வாட்டி வதைக்கிறது. கூடவே சாரல் மழையும் போட்டு எடுக்கிறது. காலை முதலே சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னைவாசிகள் ஸ்வெட்டர் போடாமல் வெளியே தலை காட்ட முடியவில்லை.
மார்கழியில் மழைக்குக் காரணம் காற்றழுத்த தாழ்வு நிலைதான் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மன்னார்வளைகுடா பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்தார்.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் கடற்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
சென்னையில் மேக மூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து விடும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் அதிகபட்சமாக 10 செமீ மழை பெய்துள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.