கர்நாடகத்தால் வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் செம மழை!
வடகிழக்கு பருவ மழை தொடங்கிய முதல் நாளே காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி மழை பெய்யத் தொடங்கிய முதல் நாளே காவிரி டெல்டா பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை காலதாமதமானதால் எப்போது இந்த ஆண்டிற்கான மழை பொழியும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 30ம் தேதி பருவ மழை தொடங்கும் என்று அறிவித்தது. அது அறிவித்தபடியே, தீபாவளிக்கு மறுநாள் மழை பெய்யத் தொடங்கியது.

தமிழகம் முழுவதுமே பரவலாக நல்ல மழை பெய்தது. காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சை, நாகை உள்பட டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 4 வரை விடிய விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் திருப்பூந்துருத்தி, கண்டியூர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. திருக்காட்டுப்பள்ளி, குடவாசல், அணைக்கரை, மஞ்சலாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஈசன்விடுதி, வெட்டிக்காடு, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவு ஒரு மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை கொட்டியது.
திருவாரூர் மாவட்டத்திலும் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதேபோல் நாகை மாவட்டத்தில் நள்ளிரவு லேசான மழை பெய்தது. வேதாரண்யம், கொள்ளிடம், பொறையார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்த மழையால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த மழை, நடவு செய்த வயலுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications