தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்குமாம்... மக்களே எச்சரிக்கை!
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பூமி குளிர்ந்துள்ளது. சென்னை வானிலை மையம் தரும் புள்ளிவிவரத்தின்படி ஜூன் ஒன்று முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் 244 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 23 சதவிகிதம் அதிகமாகும். கடந்த ஐந்து வருடத்தில் இதுதான் அதிக அளவு என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தின் ஒட்டு மொத்தமான சராசரி அளவுதான்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறியுள்ளார். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இரவில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இலங்கைக்கு அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் சிவகிரியில் 11 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications