மழைகாலத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது: ஜெயலலிதா
சென்னை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அதிக அளவில் மழை பெய்ததால் தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் முடிய நீடிக்கிறது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலதாமதமாக 28-10-2015 அன்று துவங்கியது. பின்னர் ஒரு சில நாட்களில் மிக அதிக அளவு கனமழை பொழிந்ததன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிக அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
முன்பே
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னரே, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு நான் உத்தரவிட்டிருந்தேன். அதன்படி அரசு அதிகாரிகளும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.
கனமழை
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தமிழகத்தில் 4 கட்டங்களில் கனமழை பெய்தது. 8-11-2015 மற்றும் 10-11-2015 ஆகிய நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 26.6 செ.மீ. மழை பெய்ததால், கடலூர் மாவட்டம் மழையால் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளானது. கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் 38 செ.மீ. அளவுக்கு பெருமழை பெய்தது.
மேலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13-11-2015 அன்று 32.6 செ.மீ. மழை பெய்தது. அதிகப்படியான மழை பெய்ததன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.
சென்னை
மழையின் பாதிப்பில் இருந்து மீண்டு, இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் 1-12-2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக, மீண்டும், திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது.
குறிப்பாக தாம்பரம் பகுதியில் அதிகப்படியாக 49.4 செ.மீ. மழை பெய்தது. பெருமழையின் காரணமாக ஏரிகள் நிரம்பியதால் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் இருந்து 65 ஆயிரம் கன அடி வரை உபரிநீர் திறந்து விடப்பட்டது.
வெள்ளப்பெருக்கு
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரினால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலை ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.