கன மழையால் ஸ்தம்பித்தது சென்னை.. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: காற்றழுத்த தாழ்வுமையம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பகுதிகளில் கடும் மழை, காற்று வீசிவருகிறது. பல இடங்களில் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம், புதுச்சேரி அருகே, புயலாக மாறி இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.
சென்னையில் இரவு முதலே விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. கடுமையான காற்றுடன் மழை பெய்வதால் சென்னையின் பல இடங்களில் காலை முதல் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கடலில் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டிணம், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடமுறைவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.