புதிய காற்றழுத்தம்: தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: இலங்கையையொட்டி தென் மேற்கு வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கை அருகே வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
வங்க கடலில் நேற்று கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் மாலத்தீவு - லட்சத்தீவு கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

புதிய காற்றழுத்தம்
இதற்கிடையே மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையையொட்டி தென் மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ளது.
இதன் காரணமாக தமிழகம்- புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும்.

காவிரி டெல்டாவில்
கடலோர மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யும். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை எதிர்பார்க்கலாம். உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும். தரை காற்றும் சற்று பலமாக வீசும்.

சென்னையில் திடீர் மழை
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில நேரங்களில் திடீர் மழையை எதிர்பார்க்கலாம். சென்னையிலும் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

நெல்லையில் மழை
கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட சில இடங்களில் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது.

குற்றால அருவிகளில்
செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. நெல்லை மாநகரப் பகுதி, குற்றாலம், செங்கோட்டை, அம்பாசமுத்திரம், களக்காடு, சேரன்மகாதேவி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் பெய்து வரும் மழையினால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.

நெற்பயிர்கள் சேதம்
மழையின் காரணமாக பிசான சாகுபடிகள் ஒருபக்கம் தொடங்கி உள்ள போதிலும், ஏற்கெனவே கார் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

விழுப்புரத்தில் விடுமுறை
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் சம்பத் உத்தரவிட்டார். புதுச்சேரியிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications