மகாராஷ்டிராவில் "லோ"... தமிழகத்தில் புயல் காற்றுடன் கன மழை பெய்யும் என எச்சரிக்கை!
சென்னை: மகாராஷ்டிர மாநிலத்தில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக தமிழக வான் பகுதியில் காற்றுச் சுழற்சி ஏற்பட்டுள்ளதாம். இதனால் பலத்த புயல் காற்றுடன் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரியிலும் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்குப் பருவ மழை கேரளாவில் சூடு பிடித்துள்ளது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் மகாராஷ்டிராவின் கடற்பகுதியிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கும் மழை கொட்டுகிறது.

வெப்பச் சலனம்- காற்றுச் சுழற்சி
இதன் விளைவாக தமிழக வான் பகுதியில் வெப்பச் சலனமும், காற்றுச் சுழற்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக கடலோரப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி- சென்னை
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியுள்ளது. அதேபோல சென்னையிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் 10 மில்லி
சென்னையில் நேற்று திடீனெ மாலையில் பலத்த மழை கொட்டியது. 10 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்ததால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது. அதே நேரம் புறநகர்களில் பெரிய அளவில் மழை இல்லை. இரவில் சற்று பெய்தது.

வளிமண்டல மேலடுக்கில் காற்றுச் சுழற்சி
இந்த நிலையில், தற்போது வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது வங்கக் கடல் பகுதியில் இருந்து கேரளா வரை பரவியுள்ளதால் இன்றும் தமிழகம் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்.

சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்யலாம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகியவற்றில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. மேலும், இன்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசும், அதனால் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications