நெல்லையில் திடீர் மழை எதிரொலி .... அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு
நெல்லை மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் திடீர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வறட்சி நிலவி வரும் நிலையில் தற்போதைய தென் மேற்கு பருவமழையும் குறித்த காலத்தில் பெய்யவில்லை. இதனால் பல பருவ சாகுபடி பாதித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. பகலில் கோடை வெயில் தலை காட்டினாலும் பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்து ஆறுதல் தருகிறது.
இதில் நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம் பகுதியில் 11மிமீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாளையில் 33மிமீயும், நெல்லையில் 29மிமீயும், ராதாபுரத்தில் 29 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
இது போல் பாபநாசம் 15, சேர்வலாறு 14, மணிமுத்தாறு 7, ராமநதி 10, கருப்பாநதி 2, கொடுமுடியாறு 15 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைவது தடுக்கப்படும் என பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 13 அடியாக உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் வெளியேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வருவாய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.