தென்காசி பகுதியில் குளு குளு ஐஸ் கட்டி மழை.. பொது மக்கள் மகிழ்ச்சி
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி: கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் பகுதிகளில் கன மழை பெய்து பொதுமக்களை குளிர்வித்தது. மேலும் ஆலங்குளம் பகுதிகளில் ஐஸ்கட்டி மழை பெய்தது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவும் நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைக்கிறது. கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தால் வெயில் சுட்டெரித்து வருகிறது.
கரூர், வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அனல் காற்றை தாங்க முடியாமல் மக்கள் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பலத்த மழை பெய்தது. 63 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியது. இதனிடையே இன்று பகலில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாலையில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, குண்டாறு, ஆலங்குளம் வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலொடு கன மழை பெய்து வருகிறது.
இம்மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பத்தை தாங்க முடியமால் தவித்து வந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. மேலும் ஆலங்குளம் பகுதிகளில் ஐஸ் கட்டி மழை பெய்தது. கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.