தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம்: இன்னும் 2 நாளைக்கு நீடிக்கும்
சென்னை: வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.
வழக்கத்தை விட முன்கூட்டியே இந்த வருடம் பருவமழை தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் பருவ மழை சராசரி அளவை விட கூடுதலாக பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 நாளில் பாதியளவு மழை
வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகத்தில் சராசரியாக 44 செ.மீ மழை கிடைக்கும். ஆனால் பருவமழை தொடங்கி 15 நாளில் 24 செ.மீ மழை கிடைத்துள்ளது. சராசரி அளவை மிஞ்சி ஒரு சில மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்துள்ளது.

மழை அளவு எவ்வளவு
தமிழகம் முழுவதும் பெய்துள்ள மழை அளவு கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரையில் பெய்த மழை அளவை கணக்கிடும் போது 34 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவ மழை 33 சதவீதம் குறைவாக பெய்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பல மாவட்டங்களில் சராசரியாக கிடைக்க வேண்டிய மழை அளவை விட அதிகமாக பெய்து இருக்கிறது.

தென் மாவட்டங்களில் அதிகம்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சராசரியை விட அதிக மழை பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியை விட 25 சதவீதம் மழை அதிகம் பெய்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் 103 சதவீதமும், ஈரோடு 95 சதவீதமும், நாகப்பட்டினம் 84 சதவீதமும், திண்டுக்கல் 69 சதவீதமும், கோயம்புத்தூரில் 58 சதவீதமும் மழை அளவு பதிவாகி உள்ளது.

சென்னையில் 49% கூடுதல்
சென்னை மாவட்டத்தில் இதுவரை சராசரியை விட 49 சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது. மேலும் 8 மாவட்டங்களில் சராசரி மழை அளவை விட குறைவாக பெய்துள்ளது.

குறைவான மழை அளவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 சதவீதம் குறைவாக மழை இதுவரை பெய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 34 சதவீதம் மழை பெய்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில்
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அபரிதமான மழை பெய்துள்ளது. திருச்சியில் மிக குறைவாக மழை பதிவாகி உள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை
வங்கக்கடலில் அடுத்தடுத்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புதிய புயல்
தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தீவிர காற்றழுத்த மண்டலமாக (புயல்) மாறும் வாய்ப்பு உள்ளது. வருகிற 6 அல்லது 7ஆம் தேதி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை நீடிக்கும்
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications