சென்னையில் பேய் மழை.. மீண்டும் வெள்ளக்காடு... 5 நாள் மழை என்ற முன்னெச்சரிக்கையால் பீதியில் மக்கள்
சென்னை: சென்னையில் 5 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் அடை மழை கொட்டத் தொடங்கியுள்ளது. இரவிலிருந்து விடாமல் பெய்து வரும் மழை தற்போது நகரின் பல பகுதிகளிலும், புறநகர்களிலும் கன மழையாக தொடர்கிறது.
சென்னை நகரிலும், புறநகர்களிலும் பேய் மழையாக கொட்டி வருகிறது கன மழை. நகரின் அனைத்துச் சாலைகளும் ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் வெள்ளக்காடாகியுள்ளன.
புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பழவந்தாங்கல், கிண்டி, மேடவாக்கம், செம்பாக்கம், சேலையூர் மற்றும் நகரின் பல பகுதிகளிலும் அடை மழை கொட்டி வருகிறது.
நிற்காமல் பெய்து வரும் மழையால் ஏற்கனவே தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் நிலைமை மோசமாகியுள்ளது. ஏற்கனவே தண்ணீர் தேங்கி பின்னர் வடிந்த பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மழை தொடர்கிறது. இந்த மழை தொடர்ந்து பெய்யும் என்று வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது. இன்று முதல் ஐந்து நாட்கள் வரை கன மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த தாழ்வு நிலை படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே வெள்ளக்காடாகியுள்ள கடலூர் உள்ளிட்ட வட கடலோர தமிழக மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். சென்னை நகர மக்கள் மீண்டும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.