தொடரும் கனமழை... நீலகிரி வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்
கோவை: தொடர் மழை காரணமாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் சங்கர் அறிவித்துள்ளார். அதேபோல கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் பலத்த காற்றுடன் கடந்த இரு தினங்களாக கன மழைபெய்து வருகிறது. சூறைகாற்றுக்கு மின்கம்பங்கள் சாய்ந்து மரம் விழுந்தது. இதனால் சனிக்கிழமை இரவு முதல் உதகையில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மலை ரயில் பாதிப்பு
உதகை-குன்னூர் தண்டவாளத்தில் மரம் விழுந்து விபத்து நேரிட்டதால் கேத்தியில் ரயில்கள் நிறுத்தப்பட்டது. மேலும் உதகை-மைசூர் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டம் முழுவதும் மழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் சங்கர் அறிவித்துள்ளார்.

வால்பாறையில் தொடர்மழை
இதேபோல கோவை மாவட்டம், வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. காற்றுடன் கூடிய கன மழையால், பல இடங்களில் மரங்கள் விழுந்தன; மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து
வால்பாறையில், 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை, 51.05 அடியாக இருந்தது.
மழையினால், ஒரே நாளில் ஆறடி நீர் மட்டம் உயர்ந்து, 56.96 அடியாக அதிகரித்துள்ளது.

வால்பாறை பள்ளிகளுக்கு லீல்
வால்பாறையில் தொடர்மழை நீடித்து வருவதால் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக, கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்னாயக் அறிவித்துள்ளார்.

காற்றழுத்தம்
தமிழகத்தில் தொடர்ந்து நிலவிய வெப்ப சலனம் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வளி மண்டல மேல் அடுக்கில் காற்றுசுழற்சி உருவானது. அது வங்கக் கடலில் ஆந்திரா மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருந்தது. சனிக்கிழமையன்று அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது.

ஒடிஷாவில் கரையை கடந்தது
இந்நிலையில் வட மேற்கு திசையில் காற்று வீசியதால் அந்த தீவிர காற்றழுத்தம் ஆந்திர கடலோரத்தில் கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 20ம் தேதி இரவு அது வட மேற்கு திசையில் நகர்ந்து ஓடிசாவின் கடலோரப் பகுதியான கோபால்பூர் மற்றும் பூரி இடையே கரை கடக்கும் என்று கணிக்கப்பட்டது.

லேசான மழை
இதன்படி ஞாயிறு அதிகாலை அந்த தீவிர காற்றழுத்தம் தெற்கு ஒடிசா கடல்கரைக்கு நகர்ந்து சென்றது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மீனவர்களுக்குத் தடை
இதனிடையே சூறைக்காற்று வீசுவதால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications