அக்னி வெயிலுக்கு மத்தியில் ‘ஜில்’.. 12 மாவட்டங்களுக்கு குளு குளு செய்தி.. மழை கொட்டப்போகுதாம்!
சென்னை : அக்னி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஜில்ஜில் தகவலைத் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காரணமாக அனல் வெயில் வாட்டி வதைக்கிறது. சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அக்னி வெயில் அனலை கக்கினாலும் ஆங்காங்கே குளிர்ச்சியூட்டும் வகையில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மக்கள் மனதில் பால்வார்க்கும் செய்தியை அளித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாளை (மே 21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மே 22 மற்றும் 23ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சேலம், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 75% கூடுதலாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications