வங்கக் கடல் + அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. 12ம் தேதி முதல் செம மழை பெய்யுமாம்!
சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வருகின்ற 12 ஆம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் நிலவுகிறது. இதனால் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் குறிப்பாக இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்கிறது. விடிய, விடிய மழை தூறல்கள் காணப்படுகின்றன.

கோயம்பேடு பஸ் நிலையப் பகுதி, அண்ணா நகர், புறநகர்களான குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இன்று காலையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த சூழலில் வங்கக்கடலில் ஆந்திராவுக்கு அருகே வடகிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து வருவதால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது. இதே போல் அரபிக்கடலிலும் கேரளாவுக்கு அருகே ஒரு காற்றழுத்தம் உருவாகி உள்ளது.
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. வங்க கடல், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதன் காரணமாக வருகிற 12 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று முதல் 3 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இரவில் ஆங்காங்கே மழை பெய்யும். திங்கட்கிழமை முதல் காற்றுடன் கூடிய கன மழை பெய்யும்.












Click it and Unblock the Notifications