திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மணி நேரமாக கொட்டிய பலத்த மழை.. வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 6 மணி நேரமாக கொட்டிய கனமழையால் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
திருவண்ணாமலை: போளூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் கடந்த 6 மணி நேரமாக இடைவிடாமல் பெய்த பலத்த மழையால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
கன்னியாகுமரி அருகே நேற்று மையம் கொண்டிருந்த ஓகி புயலால் தென்தமிழகத்தில் கனமழை பெய்தது. இதன் தாக்கம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் இருந்தது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

மக்கள் முடக்கம்
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் பிற்பகலில் இருந்து நல்ல மழை பெய்தது. கடந்த 6 மணி நேரமாக கொட்டிய மழையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மக்கள் அவதி
பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த மழையால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

திருவாரூரிலும் மழை
இதேபோல் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகத்தை நெருங்கும்
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்றும் 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்த நான்கு நாட்களில் அது வடதமிழகத்தை நெருங்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துதிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications