4 மணிநேரத்தில் 16 செ.மீ கொட்டிய மழை: வடபழனி சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
சென்னை: சென்னையில் சில மணிநேரங்களிலேயே 16 சென்டி மீட்டர் அளவு மழை பெய்ததாக தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது. வடபழனி நூறு அடி சாலையில் ஆறு போல ஓடும் வெள்ள நீரினால் காலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு - வடபழனி இடையே வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னையில் நேற்று பிற்பகலில் பெய்த கனமழையால் நகரில் ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கோயம்பேடு, வடபழனி, எம்.எம்.டி.ஏ ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் மழை நீர் சூழ்ந்துள்ளது.
சென்னையில், கிண்டி, ஈக்காட்டத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, போரூர், விருகம்பாக்கம், தி.நகர், நந்தனம், சைதை, பூந்தமல்லி, எழும்பூர், சேப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

போக்குவரத்து நெரிசல்
கனமழை காரணமாக சாலைகளில் வௌ்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. புரசைவாக்கம், பூவிருந்தவள்ளி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, வடபழனி, வேப்பேரி, அண்ணாசாலை, கோடம்பாக்கம், மில்லர்ஸ் சாலை, ரித்தர்டன் நெடுஞ்சாலை, கோயம்பேடு, ஆழ்வார்ப்பேட்டை, டி.டி.கே., சாலை, எழும்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் 3 மணி நேரத்துக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலுவலகம் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

தீவாக மாறிய எம்.எம்.டி.ஏ
இந்த நிலையில் இன்று காலையிலும் கோயம்பேடு பகுதியில் இருந்து வடபழனியை தாண்டி செல்லும் பேருந்துகள் ஊர்ந்து செல்கின்றன. பல வாகனங்கள் பழுதாகி பாதியிலேயே நின்று விடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்பேடு - வடபழனி இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எம்.எம்.டி.ஏ பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் சிறிய தீவு போல் காட்சியளிக்கின்றது

16 செ.மீ மழை
சென்னையில் சில மணிநேரங்களிலேயே 16 சென்டி மீட்டர் அளவு மழை பெய்ததாக தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
அனைவரும் அலுவலகங்களில் இருந்து வீடுதிரும்பும் மாலை நேரத்தில் கனமழை பெய்ததே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் காரணம் எனவும் அக்குழு தெரிவித்துள்ளது.

சராசரிக்கும் அதிகமான மழை
கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதிக்குப் பின்னர் பெய்த மழையின் அளவு சராசரியை கடந்து விட்டதாகவும் தமிழக பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக அக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் 28ல் கனமழை பெய்யும்
வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் தென்மாவட்டங்களில் கடுமையான மழைபெய்யும் எனவும் வெள்ளச் சேத மதிப்பீடு குறித்த அறிக்கை பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications