என் பிறந்தநாளில் ஆதரவற்ற முதியோருக்கு அறுசுவை உணவு வழங்குங்கள்... சரத்குமார் கோரிக்கை
சென்னை: தனது பிறந்தநாளன்று ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் படி தனது கட்சி நிர்வாகிகளுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
வருகிற 14ம் தேதி தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமார்.
தனது பிறந்தநாளை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எப்படிக் கொண்டாடலாம் என சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

சமத்துவம், சகோதரத்துவம்...
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நாம் அனைவரும் செயல்பட வேண்டும். ஜாதி, மத, இன உணர்வுகளை கடந்து அனைவரும் சமத்துவத்தோடும், சகோதரத்துவத் தோடும் வாழ வேண்டும்.

முக்கியப் பிரச்சினைகள்...
அரை நூற்றாண்டு காலமாக அவதிக்குள்ளாகி வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களின் துயரங்கள் முற்றிலும் களையப்பட வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை உட்பட அனைத்து மக்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

வீட்டுக்கு ஒரு விவசாயி...
வீட்டுக்கொரு விவசாயி உருவாக வேண்டும். அந்த நல்ல நாளே இந்தியாவின் பொன்னாள். அதற்குரிய நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். விவசாயம் ஒரு வருவாய் ஈட்டுகின்ற தொழிலாக மாற வேண்டும்.

மரம் வளர்க்கும் திட்டம்...
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பதை தொடர்ந்து ஒவ்வொருவரும் தன் பிறந்த நாளில் ஒரு மரக்கன்றையாவது நட்டு அதைப் பாதுகாக்கவேண்டும். ஒருகோடி பேர் இதைக் கடைப்பிடித்தால் ஒரே ஆண்டில் ஒரு கோடி மரம் புதிதாக வளர்க்கப்படும்.

உதவும் மனப்பான்மை...
எளியோர்க்கு உதவும் மனப்பாங்கை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தன் வருவாயில் 10 சதவிகிதத்தை எளியோர் உயர நேரான வழியில் செலவிட வேண்டும், கூட்டுக் குடும்பங்கள் தழைத்து முதியோர் இல்லங்களை நாடும் நிலை மாற வேண்டும்.

கிராமங்களின் வளர்ச்சி...
நகரத்தில் வாழ்பவர்கள், நம் கிராமங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். ஆண்டுக் கொருமுறை சொந்த மண்ணுக்குச் சென்று அந்த மண்ணின் வளர்ச்சிக்கு அதாவது கிராமத்தின், கிராம மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகத் திகழ வேண்டும்.

எனது கொள்கைகள்...
ஏற்றம்பெற பல மொழிகள் கற்றாலும் நம் தாய் மொழி தழைக்க ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சரித்திரம் படைக்க வேண்டும். நாட்டுப் பற்று வேண்டும், நல்லவரைப் போற்ற வேண்டும் என என் கொள்கைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அறுசுவை உணவளியுங்கள்...
நம்மால் முடியாது என்று இருந்து விடாமல் முடிந்த வரை முயற்சி செய்வோம்! என் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதோடு எளியோர்களுக்கு நற்பணி உதவிகளையும், தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு அறுசுவை உணவுகளையும் வழங்குங்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகளைச் செய்யுங்கள் அவர்களது மகிழ்ச்சியும், வாழ்த்துமே நமக்கு இறைவனின் ஆசிகளாய் ஏற்போம் என்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்.

சந்திப்பு...
பிறந்த நாள் அன்று மாலை 4 மணிக்கு கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சந்திக்க இருக்கிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications