அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி போட்டியிட தடை கோரி மனு- ஹைகோர்ட் தள்ளுபடி
அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் செந்தில்பாலஜி போட்டியிட தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது
சென்னை: அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று பாஸ்கர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்த மனுவில், நான் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்தேன். கடந்த 2014 ஆம் ஆண்டு போக்குவரத்துக்கழகத்தில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அப்போது என்னிடம் 200 க்கும் மேற்பட்டோர் போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அணுகினர்.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி தனது பிஏக்கள் கார்த்திக் மற்றும் சண்முகம் மூலமாக பல கோடி ரூபாயை என்னிடம் பெற்றுக்கொண்டு நான் சிபாரிசு செய்த நபர்களுக்கு வேலை வாங்கித்தருவதாக உறுதியளித்தார். ஆனால் யாருக்கும் கூறியபடி வேலை வாங்கித்தரவில்லை. அதன்பிறகு செந்தில் பாலாஜியின் பங்களாவிற்கு சென்று பணத்தை திருப்பிக்கேட்டேன்.
பணத்தை கேட்டதற்கு செந்தில் பாலாஜியும் அவரது ஆட்களும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையே செந்தில் பாலாஜியின் தூண்டுதலின்பேரில் போலீசார் என்னையும், மேலும் சிலரையும் கைது செய்தனர். நான் பலரிடமும் வாங்கிய பணத்தை அவரது பிஏக்கள் மூலமாக செந்தில் பாலாஜியிடம் தான் கொடுத்தேன் என்ற உண்மையை போலீஸில் தெரிவித்தும் போலீஸார் செந்தில் பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குற்றவியல் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட்டு பொதுவாழ்வுக்கு வரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது வேட்புமனுவை ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளேன்.
செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி வகித்த போது வேலை வாங்கித்தருவதாக கூறி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார். எனவே அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளரான செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வி.செந்தில்பாலாஜி, கே.சி பழனிச்சாமி ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications