சென்னை சிறுவன் தில்சனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரிக்கு 15 நாள் லீவ்
சென்னை: சிறுவன் தில்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரி ராமராஜூக்கு உயர்நீதிமன்றம் 15 நாள் விடுமுறை அளித்துள்ளது.
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தவர் ராமராஜ் (58) ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டின் அருகே குடிசைப்பகுதி உள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு இங்கு வசிக்கும் சிறுவர்கள் ராணுவ குடியிருப்பின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து வாதாங்கொட்டை பறித்தனர். அவர்களை விரட்ட ராமராஜ் துப்பாக்கியால் சுட்ட போது 11 வயது சிறுவன் தில்சன் குண்டு பாய்ந்து பலியானான்.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் கர்னல் ராமராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக அவர் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், இரண்டு கண்களிலும் புரை வளர்ந்து, 60 சதவீதம் பார்வை பாதித்த நிலையில் இருக்கும் தனது கணவர் ராமராஜூக்கு உடனடியாக கண் ஆபரேஷன் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அவரை ஒரு மாத விடுமுறையில் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், தன்னால் அடிக்கடி சென்னைக்கு வந்து புழல் சிறையில் இருக்கும் கணவரை சந்திக்க சிரமாக இருப்பதாகவும் எனவே,அவரை மதுரை சிறைக்கு மாற்றும்படி உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவின் மீது நேற்று விசாரணை நடத்திய நீதிபதிகள் அருணா ஜெகதீசன் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், கண் பார்வை பாதிக்கப்பட்ட ராமராஜுவுக்கு புரை நீக்கும் ஆபரேஷன் செய்ய வசதியாக 15 நாட்கள் விடுமுறையில் அனுப்புமாறு புழல் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
முழு பாதுகாப்புடன் அவரை அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், மதுரை சிறைக்கு மாற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறை துறை அதிகாரிகளை அணுகுமாறு மனுதாரரை அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications